பிரபாகரன் சரணடைந்து இறந்தார் என்றும் போராடி இறந்தார் என்றும் பல்வேறு விதமான யூகங்கள் நம்மிடையே உள்ளன. ஆனால் ''துரோகிகள்தான் அவ்வாறு கூறுகின்றார். தலைவன் இருக்கிறான்" என்று சொல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டதே தவிர, உயிருடன் இருப்பதற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில் 'பயங்கரமான" ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறது ஒரு இணையத்தளம். அந்த ஆதாரங்கள் இவைதான்.
பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.
பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.
ஜென்ம லக்னம் : கும்பம்.
ஜென்ம ராசி: விருச்சிகம்.
ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
திதி: பிரதமை திதி.
ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.
பாதசார விவரம்
அனுஷம் 3-ல் சூரியன்.
கேட்டை 1-ல் சந்திரன்.
அவிட்டம் 3-ல் செவ்வாய்.
விசாகம் 2-ல் புதன்.
பூசம் 2-ல் குரு (வக்ரம்).
விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).
விசாகம் 1-ல் சனி.
பூராடம் 1-ல் ராகு.
திருவாதிரை 3-ல் கேது.
மூலம் 3-ல் மாந்தி.
அவிட்டம் 3-ல் லக்னம்.
ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.
இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.
தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.
இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.
சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.
கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.
சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.
சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.
07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.
சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-
08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.
17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!
கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!
இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!
பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.
பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.
07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.
பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்
மேலும் நகைச்சுவைக்குப் படிக்கவும். http://tamilnetcanada.com/index.php?option=com_content&view=article&id=75%3A2009-06-26-00-25-44&catid=34%3A2009-06-15-11-13-30&Itemid=122
பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் - திகைக்க வைக்கும் ஆதாரங்கள்.
Posted by
rebel
at
1 comments
பாரதி பரம்பரையா, அண்ணா பரம்பரையா? - 2


தேசியம் என்னும் கருத்தாக்கத்தில் அண்ணா பரம்பரையும் பாரதி பரம்பரையும் முரண்படும் விதத்தைக் கவனிப்போம். பெரியார் அடிப்படையில் ஒரு தேச மறுப்பாளர். அவரது தனித்தமிழ்நாடு, திராவிடநாடு ஆகிய கருத்தாக்கங்கள் சாதிவிடுதலையை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கை வடிவங்களே.
இந்தியத்தேசியம் பார்ப்பனியக் கருத்தியல் என்பதாலும் இந்தியா என்பது பார்ப்பனியக் கட்டமைப்பு என்பதாலுமே பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். மற்றபடி அதன்பின் எந்த தேசப்பெருமிதங்களுமில்லை. அது பாசிசமாவதற்கான சுவடுகள் கூட இல்லை.
மாறாக அண்ணாவின் திராவிடநாட்டுக் கோரிக்கை பார்ப்பனர் எதிர்ப்பு என்பதை விடவும் வடவர் எதிர்ப்பு என்பதற்கே அதிகம் அழுத்தம் கொடுத்தது. அது சாதிய விடுதலை குறித்து அதிகம் பேசவில்லை, மாறாகப் பொருளாதார விடுதலை, அரசியல் விடுதலையையே பேசியது. 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' ஆகிய முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது.
ராசராசன், கரிகாலச்சோழன், சேரன் செங்குட்டவன், கண்ணகி, போன்ற ஆண்மய்யத் தமிழ்க்குறியீடுகளை அண்ணாப்பரம்பரை இன்றளவும் தனது தேசியப்பெருமிதங்களாக முன்னிறுத்துகிறது. என்றபோதும் அண்ணாவின் தேசியம் ஒரு நெகிழ்வுத்தன்மை வாய்ந்த தேசியம். அனைத்து மக்கள் தொகுதிகளையும் உள்ளடக்கியது.
அண்ணாவின் 'திராவிடத்தேசியம்' நிலத்தினடிப்படையிலானது. திராவிடமென்னும் நிலப்பரப்பில்வாழும் அனைத்து மக்களையும் அதன் குடிமக்களாகக் கட்டமைத்தது. குறிப்பாக இசுலாமியர் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச்சிறுபான்மையினரின் வாழ்வியலுரிமைகளை உறுதிசெய்தது.
ஆனால் பாரதியோ 'திராவிடநாடு'என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட ஆரம்பகாலங்களிலேயே அதை நிராகரித்து கேலிசெய்தார். பாரதி இந்தியதேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதோடு அவற்றினடிப்படைகள் யாவை என்னும் கேள்விகள் முக்கியமானவை.
காந்தி முன்வைத்த 'இந்தியத்தேசியம்' இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரை அங்கீகரித்த 'உள்ளிழுக்கும் தேசியமாய்' அமைந்தது. மேலும் உருதுமொழி உள்ளிட்ட சிறுபான்மையினர் உரிமைகளுக்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்தார். இந்திமொழியையோ சமற்கிருதத்தையோ அனைத்து மக்களுக்குமான மொழியாக, தேசிய மொழியாக முன்வைத்ததைக் காந்தி ஏற்கவில்லை.
ஆனால் திலகரின் இந்தியத்தேசியம் அடிப்படையிலேயே காந்தியிடமிருந்து வேறுபட்டது. அது இன்றைக்கு இந்துத்துவாதிகள் முன்வைக்கும் 'கலாச்சாரத்தேசியம்' என்னும் கருத்தாக்கத்திற்கு முன்னோடி. பாரதியோ சிற்சில சமாயங்களில் காந்தியை பாராட்டியிருந்த போதும் அடிப்படையில் தேசிய அடிப்படைகளில் அவர் திலகரின் மாதிரிகளையே பின்பற்றினார்.
'உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித்திரிவாரடி! கிளியே, செய்வதறியாதாரடி!'
என்று காந்தியத்தின் தேசியத்தைப் பகிடிசெய்தார். காந்தியின் ஒத்துழையாமை இயக்க அழைப்புகளைக் கண்டித்தார். பாரதியின் மீசையும் தலைப்பகையுமே திலகரைப் பின்பற்றிய குறியீடுகளே என்கிறார் வே.மதிமாறன்.(ஆனால் இந்த வேடம் காசியில் வாழ்ந்த ஒரு பழங்குடி மக்களின் கலாச்சாரம் என்பதாகக் கவிதாசரணில் ஒரு கட்டுரை வெளியானது. ஆனால் அதற்கான விரிவன ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.)
பெண்ணிய நோக்கிலிருந்து பார்த்தாலும் கூட பெரியாரிடமிருந்து அண்ணா பரம்பரை விலகியே நின்றது. என்றபோதும் அவை தமிழ்-திராவிட ஆணிய மதிப்பீடுகளை முன்வைத்ததேயல்லாது பாரதியைப் போல இந்துத்துவ ஆணிய மதிப்பீடுகளை அல்ல.சதி என்னும் உடன்கட்டை ஏறும்வழக்கங்களை அண்ணாபரம்பரை நியாயப்படுத்தியதோ ஆதரித்ததோ அல்ல.கண்ணகியைக்கூட ஒரு சுயேச்சையான நீதிகேட்கும் பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டாடியததேயொழிய கோவலனைக் கொண்டாடியதில்லை. ஒப்பீட்டளவில் பாரதியின் 'பெண்ணியத்தை'விடவும் கருணாநிதியின் 'பெண்ணியம்' முற்போக்கானது.
மேலும் பெரியாரைப் பாதித்த மூன்று கோட்பாடுகளாக பவுத்தம், இஸ்லாம்,கம்யூனிசம் ஆகியவற்றைச் சொல்லலாம்.இவற்றில் பவுத்தம், இஸ்லாம் ஆகிய கருத்தியல்களை அண்ணாபரம்பரை உள்வாங்கிக்கொண்டதென்று சொல்லமுடியாது. எனினும் இசுலாமியர்களை நட்புச்சக்திகளாகவும், திராவிடர் என்னும் விளிப்பின் உள்ளங்கமாகவுமே பார்த்தது. மேம்போக்கான கம்யூனிசக் கருத்துக்களை தமிழ்ப்பொதுவெளியில் நாடகம் மற்றும் சினிமா ஆகியவற்றின் மூலம்கொண்டு சேர்த்த பெருமை அண்ணா பரம்பரைக்கு உண்டு.
ஆனால் பாரதி பவுத்த்தை நிராகரித்து ஆதிசங்கரரைத் தூக்கிப்பிடிக்கிறார். பாரதி மாயாவாதத்தை ஏற்றுக்கொண்டவரில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் மாயாவாதம் என்னும் தீங்கைப் பவுத்தமே இந்தியச் சமூகத்திற்குள் கொண்டுவந்தது என்னும் பொருந்தாப் பழியைப் பவுத்ததின் மீது சுமத்துகிறார்.
எனவே 'பாரதி பரம்பரையை' விடவும் 'அண்ணாபரம்பரையே' 'பெரியார் பரம்பரைக்கு' நெருக்கமானது. திராவிட இயக்கம் குறித்து மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை அவற்றின் உள்ளிருந்தே உருவாக்கிகொள்ள வேண்டுமேயல்லாது வெளியிலிருந்து திணிக்கப்பட்ட அளவுகோல்களின் வழியாக அல்ல.
சில குறிப்புகள்:
1. புதுமைப்பித்தன், மௌனி ஆகிய இலக்கியப்பீடங்களைக் கட்டவிழ்த்த தமிழ்விமர்சகர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் கூட பாரதியைக் கட்டவிழ்ப்பதில் தயக்கமிருக்கிறது. பெரியாரை நவீனச்சிந்தனைகளில் பொருத்தி கோட்பாட்டுருவாக்கம் செய்ததில் நிறப்பிரிகைக்கு முக்கியப்பங்கிருக்கிறது. ஆனால் மேற்சொன்ன இலக்கிய ஆளுமைகள் குறித்து விரிவான காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து பு.பி, மௌனி பிரதிகளில் தென்பட்ட சாதியக்கூறுகளை வெளிக்கொணர்ந்த நி.பி தோழர்கள் பாரதி விசயத்தில் மௌனமே சாதித்தனர். ஒரே ஒரு விதிவிலக்கு அ.மார்க்ஸ் சில ஆண்டுகளுக்கு முன் பாரதியின் 'புதுமைப்பெண்' என்னும் உருவகத்தினடிப்படை இந்துச்சனாதனத் தேசியமாகவே இருப்பதையும் அவற்றினின்றுபெரியாரின் பெண்ணியக் கருத்துக்கள் விலகி மிதப்பதைக் குறித்த தீராநதியில் எழுதிய கட்டுரை.
அதேபோல திராவிட இயக்கத்தின் சில அடிப்படையான சமூக ஜனநாயக அம்சங்களைப் பாராட்டுவதில் தயக்கம் காட்டுகிற இடதுசாரிக்கட்சிகள் பாரதியைக் கொண்டாடுவதில் தயக்கம் காட்டியதில்லை. பாரதி மீதான காத்திரமான விமர்சங்களை முன்வைக்கும் இடதுசாரி இயக்கமாகப் புதியகலாச்சாரம் மட்டுமே விளங்குகிறது.
2. திராவிட இயக்கம் மற்றும் அவர்களின் இலக்கியம் என்றாலே ஏளனமாகப் பார்க்கும் பார்வை அன்றைய மேட்டுக்குடி இலக்கியவாதிகளுக்கு மட்டுமில்லை, விளிம்பு இலக்கியம் பேசும் 'கலக' இலக்கியவாதிகளுக்குமிருக்கிறது. உதாரணம் சாரு. திராவிட இயக்க இலக்கியங்களைக் 'குப்பை'என்று தள்ளுவதில் சாருவும் ஜெய்டமோகனும் ஒரேபுள்ளியில் ஒன்றிணைகின்றனர்.
எக்ஸில் தோழர்கள் தொகுத்து கொண்டுவந்த 'கருப்பு' இதழில் புதுமைப்பித்தனைக் கிழிகிழியென்று கிழித்திருந்தார் சாரு.ஆனால் அவர் பு.பிக்கு முன்வைக்கும் அத்தனை விமர்சனங்களும் பாரதிக்கும் பொருந்தும். பு.பி தலித்துக்களைப்பற்றிக்கவலைப்படவில்லை. ஆனால் பாரதி தலித்துக்களுக்காக ரத்தக்கண்ணீர் வடித்தான் என்கிறார். ஆனால் உண்மையில் பாரதி தலித்துகளின் மீது கொண்ட அக்கறை அவர்களின் மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதிலேயும் இந்துமதப் பாதுகாப்பு என்னும் அம்சத்தினடிப்படையிலேயே அமைந்தது. கலைஞரைக் 'கருணாநிதி' என்றழைத்துப் புரட்சி பண்ணுகிற சாருவினால் சுப்பிரமணி என்று ஏன் எழுதமுடியவில்லை? பாரதி என்பதும் பட்டம் தானே?
திராவிட இயக்க வெறுப்பு என்பது சாருவை எந்தளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது? அவரது தசாவதாரம் விமர்சனத்திலொரு வரி.
/பிராமணர்கள் ஐரோப்பாவிலிருந்தும் , மத்திய ஆசியாவிலிருந்தும் கைபர் கணவாய் வழியாக வந்த அந்நியர்கள் என்று சொல்வதில் எத்தகைய மூடத்தனமும் , இன வெறியும் அடங்கியுள்ளதோ அதே அளவு மூடத்தனமும் , இனவெறியும் முஸ்லீம்களை இப்படி அந்நியர்களாகக் காண்பிப்பதிலும் அடங்கியுள்ளது./
ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்னும் கருத்து இனவெறியல்ல, மாறாக அது வரலாற்றாய்வாளர்கள் முன்வைக்கும் உண்மை. அதை 'இனவெறி' என்று (மறைமுகமாக ஆரியர்கள் இந்தியாவின் பூர்விகக்குடிகள் என்று ஒத்துக்கொள்ளும் தன்மையுடன்) இந்துத்துவாக் குரலில் பேசும் சாரு கமலகாசனின் இந்துத்துவச் சார்பை விமர்சிக்கும் வினோதத்தை என்னென்பது?
Posted by
rebel
at
0
comments
பாரதி பரம்பரையா? அண்ணா பரம்பரையா?- பைத்தியக்காரன் மற்றும் ரவிசீனிவாசைத் தொடர்ந்து...


பெரியார் பரம்பரை குறித்துப் பிரமிள் எழுதியதைத் தோழர்.பைத்தியக்காரன் தனது வலைப்பூவில் வெளியிட்டதையும் அதற்கெதிரான ரவிசீனிவாசின் எதிர்வினையையும் நண்பர்கள் படித்திருக்கலாம்.
பிரமிளின் கட்டுரையைத் தொடர்ந்து வேறு சிலவிசயங்கள் குறித்தும் நம் உரையாடலின் கவனத்தைக் குவிக்கலாம் எனக் கருதுகிறேன்.
முதலாவதாக சாதிய மனோபாவமும் அரசியல் குறித்த ஒவ்வாமையும் அன்றைய மேட்டுக்குடி- உயர்சாதி இலக்கியவாதிகளிடம் நிலவிவந்த சூழலில் அதுகுறித்த காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தவர் என்றவகையில் பிரமிளின் பங்கு முக்கியமானது. ஒருவகையில் பீடத்திலேற்றப்பட்ட இலக்கியப் புனிதங்களின் மீது கட்டவிழ்ப்புக்களை நிகழ்த்துக் காட்டிய நிறப்பிரிகைத் தோழர்களுக்கு முன்னோடியாகப் பிரமிளைச் சொல்லலாம். பிரமிளை இந்தியச் சிரமண மரபில் பொருத்தி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்பொழுது ரவிசீனிவாஸ் சொல்வதைப் போலவே மேட்டுக்குடி இலக்கியவாதிகள் பிரமிளை வெறுமனே 'இலக்கிய வம்புச்சண்டைக்காரராகவே' பார்த்தனர், பார்க்கின்றனர். பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் வெறுமனே குறுகிய இனவெறி கொண்ட இயக்கமாகச் சித்தரிக்கிற, பொதுப்புத்தியில் பதிய வைக்கிற மனோபாவத்திற்கும் இதற்கும் தொடர்பும் தொடர்ச்சியும் உண்டு.
கலைஞர்.கருணாநிதி எழுத்தாளரே அல்ல என்று அதிரடி ஜெயமோகன் ஸ்டேட்மெண்ட் உதிர்த்தபோது, 'ஜெயமோகனின் சுயமோகம்' என்னும் பழைய பிரமிளின் கட்டுரையைச் சிறுவெளியீடாகத் தோழர்.பொதியவெற்பன் வெளிக்கொணர்ந்திருந்தார். திராவிட இயக்க ஆளுமைகள் குறித்தும் அவர்களது எழுத்துப்பணிகள் குறித்தும் கவனப்படுத்தியவர் என்றவகையில் பிரமிளின் பங்கு அலாதியானது. ஒருவேளை பார்ப்பனர்களுக்குப் பிரமிளின் மீது இருக்கும் பரம்பரைப் பகைக்கு இது பிரதான காரணமாக இருக்கலாம்.
ஆனால் இங்கு நான் கவனப்படுத்த விரும்புவது, பிரமிள் தனக்குப் பிரியமானவர்களை, ஆதர்சத்துக்குரியவர்களை ஒரே நேர்கோட்டில் கொண்டுவர முயல்கிறார், ஒன்றின் தொடர்சியாக மற்றொன்றை முன்வைக்கிறார் என்பதையே. குறிப்பாக பாரதி, பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஆர்.ராதா, பாரதிதாசன், எம்.ஜி.ஆர் என அனைவரையும் ஒரே கண்ணிகளாகக் காண முயல்கிற பார்வை. இது இன்றைய சூழலில் தேவையற்றது மட்டுமல்ல, அதன் அடிப்படைகளையே காலி செய்வதுமாகும்.
/இந்த இயக்கத்தின் நாடகத்துறை வெளியீடு மிகக் காட்டமாக பெரியாருடன் இயங்கிய எம்.ஆர். ராதாவிடமும், சினிமா வெளியீடு கவர்ச்சித் தன்மையாக, அண்ணாதுரை, கருணாநிதியுடன் இயங்கிய எம்.ஜி. ராமச்சந்திரனிடமும் பிறந்து பாமரப் பெரும்பான்மையினருள் ஊடுருவிற்று. எனவே இது ஒரு சமூகப் புரட்சித் தொடர் இயக்கம். இந்தப் புரட்சிகரம் மட்டுமே பாரதிபரம்பரை என்ற பிரயோகத்தின் நியாயமாகும். /
என்கிற பிரமிளின் கூற்றுக்கு எந்தவித அடிப்படைகளும் இல்லை. இப்படியாக முதலில் சறுக்கும் பிரமிள்,
/ பாரதியின் கலாச்சாரப் பார்வையும், பெரியாரின் கலாச்சார நிர்மூலப் பார்வையும் தாம் இவ்விருவரின் பிணக்கு, இது ஒரு ஆதார வேறுபாடு. பார்க்கப் போனால் பாரதியின் கலாச்சாரப் பார்வைகூட அங்கங்கே தவறான முடிவுகளுக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது எனக் காணலாம்./
என்று சரியாகவே அடையாளப்படுத்துகிறார். ஆனால் கலாச்சாரப் பார்வை, கலாச்சார நிர்மூலப் பார்வை என்றெல்லாம் பிரமிள் முன்வைக்கும் கருதுகோள்களுக்கான அடிப்படைகள் எதுவென்று விளங்கவில்லை. மேலோட்டமான முற்போக்குப் பார்வை, மற்றும் அபிமானம் சார்ந்த மதிப்பீடாகவே இது விளங்குகிறது. எனவேதான்
/பார்ப்பன எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு ஆகியவற்றில் பெரியாரும் பாரதியாரும் இரட்டையர்கள்/
என்னும் தவறான முன்வைப்பைப் பிரமிள் முன்வைக்கிறார்.
இங்கு ரவிசீனிவாஸ் குறிப்பிடுவதைப் போல,
/பெரியாரின் சமூகப் புரட்சிகரம் பாரதியின் தளத்தைத் தொட்டு, அதினின்று வேறுபட்டு விரிந்த ஒன்று. இந்த வேறுபாட்டை உணர்ந்து பெரியாரின் இயக்கத்தைப் பாதமாக விமர்சித்து பாரதி ஒரு கட்டுரை கூட எழுதியுள்ளார்.
பெரியாரைப் பாரதி விமர்சித்து ஒரு கலாச்சாரக் கோணத்திலிருந்து என்று திட்டவட்டமாகக் கூறிவிடவும் முடியாது/
என்று பிரமிள் எழுதுவது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழை. பாரதியின் காலத்தில் பெரியார் என்னும் ஆளுமை உருவாகவே இல்லை. பின்னாட்களில் பெரியார்தான் பாரதியை விமர்சித்திருக்கிறாரே அல்லாது, பாரதி பெரியாரை விமர்சித்தார் என்பது அடிப்படையிலேயே தவறானது.
ஆனால் பாரதி காலத்தில் 'பெரியார்' தான் உருவாகவில்லையே தவிர, பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாகியிருந்தது. இதை எப்படிப் பாரதி எதிர்கொண்டார் என்பதைக் கவனித்தோமானால் பாரதியின் பார்ப்பன எதிர்ப்பின் வரம்புகள் நமக்கு விளங்கும்.
"ஒன்றோடொன்று சம்பந்தம், பந்திபோஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்குள்ளேயே இருந்துவருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர்"
என்று சொல்வதன் மூலம் இந்துச் சாதியப் படிநிலை அமைப்பின் தன்மையையும் இயங்கியல் போக்கையும் இவற்றுக்கெல்லாம் ஆதாரமாய் விளங்கும் பார்ப்பன மேலாண்மையையும் பாரதி மறுக்கிறார். மற்றெந்தச் சாதிகளையும் விட பார்ப்பனர்களே அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் அதிகார வர்க்கத்தில் நீக்கமற நிறைந்திருந்தார்கள் என்பதைப் பாரதி கணக்கிலெடுத்துக்கொள்ளாதது மட்டுமல்லாது மற்ற சாதிகளின் சாதிய மனோபாவத்தோடு பார்ப்பனச் சாதி மனோபாவத்தை ஒன்றாக்குவதன் மூலம் பிரச்சினையை நீர்த்துப்போக வைக்க முயல்கிறார். அனைத்துச் சாதிகளின் தீண்டமை மற்றும் சாதியாதிக்க மனோபாவத்திற்கும் கருத்தியல் அடிப்படையாக விளங்கியது பார்ப்பனீயமே என்பதையும் மறைக்கிறார்.
அதனால்தான்,
" பிராமணரல்லாதார் என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய்" என்று பாரதியால் சொல்ல முடிந்தது. உண்மையிலேயே பாரதி ஒரு முற்போக்கான பார்ப்பனராக இருந்திருந்தால் 'பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின்' வரலாற்றுத் தேவையை அங்கீகரித்து அவர்களின் கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்திருக்க முடியும். இத்தகைய மனோபாவம் பிரமிள் குறிப்பிடுகிற எம்.என்.ராயிடமும், தமிழகத்தில் ஏ.எஸ்.கே, வ.ரா போன்ற பார்ப்பனர்களிடம் இருந்தது.
ஆனால் ஒட்டுமொத்தமான பார்ப்பன மேலாண்மைக்கு எதிரான தாக்குதல் என்னும்போது பாரதி ஒரு அதிதீவிர வலதுசாரி சனாதனப் பார்ப்பனராகவே விளங்குகிறார். அதனால்தான் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் இருபெரும் கோரிக்கைகளில் ஒன்றாகிய வகுப்புவாரிப்பிரதித்துவத்தை 19.01.1921 சுதேசமித்திரன் இதழில் கண்டித்து எழுதுகிறார். மற்றொரு கோரிக்கையான திராவிட நாடு கோரிக்கையையும் பகிடி செய்கிறார்.
"ஹிந்துமதத்தை வேரறுத்து இந்தியாவில் கிறிஸ்து மதத்தை ஊன்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வேலை செய்துவரும் பாதிரிகள், ஹிந்துமதத்திற்குப் பிராமணரே இதுவரை காப்பாளிகளாக இருந்துவருதல் கண்டு அந்தப் பிராமணரை மற்ற சாதியார் பகைக்கும்படி செய்தால் தம்முடைய நோக்கம் நிறைவேறுமென்று யோசிக்கத் தொடங்கினார்கள்"
என்று பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும் 'திராவிடர்' என்னும் கருத்தாக்கத்தையும் 'கிறித்துவச்சதியின்' ஒரு அங்கமாக விளக்குகிறார். இக்குரலில் இன்றைய இந்துத்துவத்தின் வேர்களை அடையாளங்கண்டுகொள்ளலாம்.
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை அணிதிரட்டியபோது 'பறையர்களை ஒன்றுதிரட்டு, ஹிந்து என்று நாமங்கொடு, விபூதி பூசு, சோறு போடு" என்று பேரடையாளத்திற்குள் உள்ளிழுப்பதற்கான விளிப்பை முன்வைக்கிறார். 1910ல் நடைபெற்ற இந்துமகாசபையின் நோக்கமும் நடைமுறையும் அதுவாகவே இருந்தது என்பதையும் நாம் கவனிக்கலாம். இங்கு பறையர்களை ஒன்று திரட்டும்போது கூட, "சென்னைப் பட்டிணத்துப் பட்லர்களைப் பற்றிப் பேச்சில்லை, கிராமத்துப் பண்ணைப் பறையர்களைப் பற்றித்தான் பேச்சு" என்கிறார். ஆங்கிலேய ஆட்சியில் ஆங்கிலக் கல்வி கற்று பார்ப்பனர்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவிற்கு அதிகாரத்தில் பங்குபற்ற முனைந்த தாழ்த்தப்பட்டோரைக் குறித்த இந்தக் கேலியை பார்ப்பன வன்மம் என்று அடையாளப்படுத்தாமல் வேறு எப்படி அடையாளப்படுத்துவது?
பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு ஊசலாட்டங்களுக்கிடையேயான, சுய அனுபவ எரிச்சலின் அடிப்படையிலான மேம்போக்கான முற்போக்காகும்.
ஆனால் சாதியத்தின் - பார்ப்பனியத்தின் அடிப்படைகளைக் கட்டிக்காப்பதையே பாரதியின் உள்மனம் விரும்ப்யது என்பதே உண்மை. அவரது சாதி எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் மீதான கரிசனம் ஆகியவை கூட 'இந்துமதத்தைக் காப்பாற்ற விழைவதற்கான' நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையே. குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் வன்முறைநிறைந்த கொடும் இந்துமதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாற முனைந்தபோதே பாரதி 'தாழ்த்தப்பட்டோர் மீதான கரிசனத்தை' முன்வைக்கிறார்.
அதேபோல் பாரதியின் பெண்ணியக் கருத்துக்களும் வரம்பிற்குட்பட்டவை. இந்தியாவில் சாதி குறித்து மட்டுமல்ல, ஆணாதிக்கம் குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டுமெனில் இந்துமதம், பார்ப்பனீயம் ஆகிய அடிப்படைகளை இரக்கமின்றித் தாக்கவேண்டும். ஆனால் பாரதியின் பெண்ண்யம் இந்துப்பெருமிதத்தைக் கொண்டாடுவை.
தொடக்ககாலகட்டத்தில் சதி எதிர்ப்பு, விதவைமணம் ஆகியவற்றை ஆதரித்த பாரதி, பின்னாளில் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் திலகரின் தாக்கத்திற்குட்பட்ட நாட்களில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஆதரிக்கவே செய்கிறார்.
"நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல் உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள்" ( கர்மயோகி - பிப்ரவரி, 1910) என்கிறார் பாரதி.
மேலும் அவர் கட்டமைக்க விரும்பும் 'இந்தியப் பெண்மை' இந்துப் பார்ப்பனப் பெண்மைதான். தாய்த்தெய்வ வழிபாடு உள்ளிட்ட மாற்றுக் கலாச்சாரக் குறியீடுகளை அவர் கணக்கிலெடுத்துக்கொண்டதில்லை. மாறாக சாவித்திரி, தமயந்தி, நளாயினி ஆகிய இந்து உயர்சாதியத் தொன்மங்களையே குறியீடுகளாக முன்வைக்கிறார்.
எனவே பெரியாரையோ, திமுக எழுத்தாளர்களையோ, இன்னும் சொல்லப்போனால் பாரதிதாசனையோ கூட பாரதியின் தொடர்ச்சியாகக் கணிப்பது தவறானது மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் அடிப்படைகளையே நீர்த்துப் போகச் செய்வதுமாகும்.
உண்மையில் திராவிட இயக்கம் என்பதையே கூட ஒற்றைக் குடைக்குள் வந்துவிட முடியாது. அதையும் பெரியார் பரம்பரை, அண்ணா பரம்பரை என்று இரண்டாகப் பிரிக்கலாம். பெரியாரின் பரம்பரையில் பிரமிள் குறிப்பிடுபவர்களில் நடிகவேள் எம். ஆர்.ராதா மட்டுமே அடங்கவார். தமிழ்ப்பெருமிதம், 'திராவிட' ஆணிய மதிப்பீடுகள் ஆகியவற்றை முன்வைத்த கருணாநிதி, பாரதிதாசன், எம்.ஜி.ஆர் ஆகியவர்களை (வசதி கருதி) அண்ணா பரம்பரை எனலாம்.
ஆனால் ராதா இத்தகைய பெருமிதப் பெருங்கதையாடல்களுக்கு அப்பாற்பட்டவர். தனது பிரதிகள் வழியாகப் பெரியாரைப் போலவே தொடர்ச்சியாகக் கட்டவிழ்ப்புக்களை நிகழ்த்தியவர். பெரியாரின் பரம்பரையில் குத்தூசி குருசாமி உள்ளிட்ட அன்றைய சுயமரியாதை இயக்க அறிவுஜிவிகள், எழுத்தாளர்கள் ஆகியோரைச் சொல்லலாம்.
இப்போது பெரியார் பரம்பரை, அண்ணா பரம்பரை, பாரதி பரம்பரை என மூன்றுவகையான பரம்பரைகள் இருக்கின்றன, அவற்றிற்கான சில அடிப்படைக் கூறுகள் இருக்கின்றன என்று கொண்டு ஒப்புநோக்கினால பெரியார் பரம்பரைக்கு நெருக்கமானது எது என்னும் முடிவிற்கு வரலாம்.
சாதி, இந்துமதம், பார்ப்பன எதிர்ப்பு ஆகிய பெரியாரிய அடிப்படைகளைக் கொண்டு கணக்கிட்டால் ஒருகாலகட்டம் வரை அதற்கு நீதி செய்வதாகவே அண்ணா பரம்பரை விளங்கிவந்தது. கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய இந்துப் பிரதிகளைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தியதில் அண்ணாவிற்கு நிகரான ஒரு எழுதாளரைச் சொல்லவியலாது.
சில ஆண்டுகளுக்கு முன் ஞாநி அவர்களால் சூழலின் முக்கியத்துவம் கருதி, அண்ணாவின் 'சந்திரமோகன் அல்லது சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகம் நவீன நாடகமாக நடத்தப்பட்டது. ஆனால் அதைவிடவும் அதிகம் திறப்புக்களை உடையதும் பரிமாணங்கள் கொண்டதும் தத்துவார்த்தப் பார்வை கொண்டதுமான நாடகம் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்'. 'இரக்கம் என்னும் ஒருபொருளிலா அரக்கன்' என்னும் கம்பரின் வரியை எடுத்துக்கொண்டு பல கேள்விகளை எழுப்பி, 'இரக்கம்' என்னும் மதிப்பீட்டைக் கட்டவிழ்ப்பது அண்ணாவின் பிரதி. எல்லாவித அறவியல் மற்றும் ஒழுக்கவியல் மதிப்பீடுகளின் பின்னும் விளங்கும் சாதிய மற்றும் வர்க்க மனோபாவம் குறித்து கலைத்தன்மை குன்றாமல் கேள்விகளை முன்வைப்பது 'நீதிதேவன் மயக்கம்'.
அதேபோல் கருணாநிதியின் 'குப்பைத்தொட்டியின் கதை' பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' உள்ளிட்ட பல பிரதிகள் நவீன இலக்கியவாதிகளால் 'தீண்டப்படாதவை' என்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்த அண்ணா பரம்பரையைச் சேர்ந்தவர்களின் பிரதிகள் இந்துப்பிரதிகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல. கருணாநிதி முன்வைக்கும் கண்ணகி ஒரு தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளை முன்னிறுத்தும் ஆண்மய்யக் குறியீடுதான் என்றபோதிலும்கூட அது சமண இலக்கியத்தினின்று எடுக்கப்பட்டது. அதேபோல் மந்திரிகுமாரி திரைப்படத்தில் 'குண்டலகேசி' என்னும் பெண்ணியக் கருத்தை முன்வைக்கும் அவைதீகப் பிரதி அடிப்படையிலான பாத்திரத்தையே கலைஞர் வடித்துத் தந்தார். ஆனால் பாரதியோ பவுத்த சமணப்பிரதிகளின் பக்கம் மறந்தும் எட்டிப் பார்த்தவரில்லை. அவருக்குக் கண்ணகி முக்கியமில்லை, பாஞ்சாலிதான் முக்கியம். பாஞ்சாலிசபதம், சத்ரபதி சிவாஜி போன்ற இந்து தொன்ம மற்றும் பிரதிகள் அடிப்படையிலேயே பாரதியின் பிரதிகள் விளங்கின.
(தொடரும்..)
Posted by
rebel
at
6
comments
தொடர்ச்சி - 1
இந்தக் கதை எழுதும் முடிவைத் தன் தோழி பாலி அதிசயாவிடம் சொன்னபோது அவள் சிரித்தாள். " பத்துவருசத்திற்கு முந்தி குமுதத்தில் எழுதறவனை எழுத்தாளன்னு ஒத்துக்கமாட்டாங்கே, அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கணையாழியில் எழுதி அப்புறம் குமுதத்துக்கு எழுத வந்தா எழுத்தாளன்னு ஒத்துக்கிட்டாங்கே. இப்ப கணையாழியில் ஒருபக்கம், குமுதத்தில் மூணு பக்கம் எழுதினாலும் எழுத்தாளன். சோ நோ பிராப்ளம்" என்றாள்.
அதிசயா குறித்தே ஒரு நாவல் எழுதலாம். அவள் கல்லூரியில் படிக்கும்போது பீஸ் கட்ட பேங்க் கவுண்டரிற்காகக் கியூவில் நின்றிருக்கிறாள். அப்பதானா ஒரு கிழட்டுப் பார்ப்பான் தன் மகளுக்குப் பீஸ் கட்ட அந்தப் பேங்கிற்கு வந்து இவள் பின்னால் நிக்கணும். 'இப்பல்லாம் யாரும் சாதி பார்க்கிறது கிடையாது. கோட்டா கொடுத்து கவர்ன்மெண்ட் கெடுக்குது. இந்த சுப்ரீம் கோர்ட்டும் இப்ப கெட்டுப்போயிடுத்து" என்று புலம்பியிருக்கிறார்.
நீங்க சொல்ரது செண்ட் பர்சண்ட் சரிதான் சார், சாதியெல்லாம் இப்ப யாரும் பார்க்கிறது கிடையாதுன்னு சிரிச்சுப் பேசி அந்தாள் அட்ரசையும் வாங்கிக்கிட்டா. மறுநாள் காலையில் பார்த்தால் அந்தப் பார்ப்பான் வீட்டுக்கு தன் தெருவிலுள்ள ஒரு தலித் பையனைக் கூட்டிட்டுப் போய் அவர் மகளைப் பொண்ணு கேட்டிருக்கா. இப்படியான கலாட்டாக்களையும்கூடக் கதையாக எழுதலாம்தான்.
ஆனால் விசித்திரன் எழுதத் தீர்மானித்ததோ ஒரு ஹோமோசெக்சுவல் கதை.
(தொடர்ச்சியை suguna2896.blogspot.com ல்காண்க)
Posted by
rebel
at
0
comments
தொடர்ச்சி - 3
ஆனால் இப்போது கதைக்கு அது முக்கியமில்லை. கதைக்கு முக்கியம் பாஸ்கர். பாஸ்கரையும் வசூல் முடித்துத் திரும்பும் பயணமொன்றில்தான் சந்தித்தான். பேருந்தில் அருகிலமர்ந்து பேசிக்கொண்டு வந்தவர் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அன்னியோன்யமாகிவிட்டார். அவர் கொடைக்கானலில் ஒரு வங்கியில் மேலாளர். வீட்டிலுள்ளவர்களைப் பற்றியெல்லாம் விசாரித்தவர் தன் வீட்டிலுள்ளவர்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார். சாப்பாடு, மற்றும் டீ இடைவேளைக்காக பேருந்து பத்துநிமிடம் நெடுஞ்சாலை உணவகமொன்றில் நின்றபோது இவனுக்காக சிப்ஸ் வாங்கிக்கொடுத்தார். பேருந்து கிளம்பும்போது இவன் தோளில் தலை வைத்துப் படுத்துக்கொண்டார். 'திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான்வைத்த பூச்செடியே...' பாடலைத் தானும் சேர்ந்து முனகினார். ஆனால் விசித்திரனுக்கோ அது கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. அவர் எப்போது வேண்டுமானாலும் தன் தொடையில் கைவைத்துவிடுவார் என்று பயந்துகொண்டே வந்தான். ஏனெனில் ஹோமோக்கள் முதலில் எதேச்சையாகப் படுவதுபோலத்தான் தொடையில் கைவைப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல அவர்களின் விரல்கள் மேலே மர்ம ஸ்தானத்திற்கு உயரும். அந்த கிளைமாக்ஸ் வரை விசித்திரன் ஹோமோக்களை அனுமதித்தே வந்தான். ஆனால் அந்த இடத்தில் கைவைக்கும்போது மட்டும் அவனால் ஒத்துழைக்க முடியவில்லை. சடாரென்று பையை அதன் மேல்வைத்து மறைத்துவிடுவான் அல்லது வேறு இருக்கைக்கு நகர்ந்துவிடுவான். அதேபோலத்தான் பாஸ்கரும் கைவைப்பார் என்று எதிர்பார்த்தான் அல்லது பயந்தான். இரண்டுமணிநேரம் தொடர்ந்த இந்த விளையாட்டு மதுரை ஆரப்பாளையம் பேருந்துநிறுத்தம் வந்தவுடன் முடிவடைந்தது. அவனிடன் போன்நம்பர் வாங்கிக்கொண்டு பாஸ்கர் விடைபெற்றார். ஆனால் கடைசிவரை தான் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடந்துவிடாததில் நிம்மதியை விட ஏமாற்றமே அதிகமிருந்தது விசித்திரனுக்கு. பிறகு பலமுறை பாஸ்கர் தொலைபேசியில் அழைத்தபோதும் ஒருமுறைகூட விசித்திரன் பேசவில்லை.
(கதையின் தொடர்ச்சியை suguna2896.blogspot.comல் காண்க)
Posted by
rebel
at
0
comments
ஒன்றுமில்லை.
என்ன குழம்பிவிட்டீர்களா? உங்கள் கேள்விக்கான பதில்தான் அது. சமூகமாற்றத்திற்காக அமைப்புகளில் சேர்ந்து பணியாற்ற எனக்கு எந்த சிக்கலோ தயக்கமோ இல்லை. நானும் அமைப்புகளில் இருந்தவன்தான். கல்லூரியில் படிக்கும்போது திராவிடர்கழகத்தில் மாவட்டமாணவரணி அமைப்பாளர், அதற்குமுன் இந்தியமாணவர் சங்கத்திலிருந்து மாணவர்போராட்டம் நடத்திப் பழிவாங்கப்பட்ட வரலாறு, தி.கவிலிருந்து வெளியேறி பெரியார்திராவிடர்கழகத்தில் நகர அமைப்பாளராகப் பணி எனப் பல்வேறு அமைப்புகள். அமைப்புகள் மீது விமர்சனம் வைத்து வெளியேறியபிறகு நான், அ.மார்க்ஸ் போன்றவர்களெல்லாம் இணைந்து 'சுயமரியாதை இயக்கம்' என்னும் அமைப்பின் பெயரால் இயங்கினோம்.
திண்டுக்கல்லில் நான் ஒருவன்தான் சுயமரியாதை, 'இயக்கம்' ((-.. ஆனால் ஆப்கன் போருக்கு எதிராக, இந்துத்துவத்திற்கு எதிராக, தலித்துகளுக்கு ஆதரவாக, தலித் விமர்சனம் என்ற பெயரில் பெரியார் மீது சேறுவீசப்பட்டபோது பெரியாருக்கு ஆதரவாக என்று பலகூட்டங்கள். முஸ்லீம் அமைப்புகளுடன் இணைந்து கூட்டம் நடத்தியதாலேயே உளவுத்துறையின் கண்காணிப்புப் பட்டியலில் இருக்க நேரிட்டது. தானாகவே எரிந்துபோன ஆர்.எஸ். எஸ் அலுவலகம் தொடர்பான வழக்கில் என்னை விசாரிக்க போலீஸ் வீடு தேடிவந்தது.
இப்படியெல்லாம் அமைப்புகளில் இருந்து பணியாற்றியதுதான். அதனால் அமைப்புகளில் இணைந்து பணியாற்றக்கூடாது என்று எந்த அஜெண்டாவும் எனக்கு இல்லை. ம.க.இ.க, பெரியார் தி.க, ஆதித்தமிழர்பேரவை போன்ற அர்ப்பணிப்பும் நேர்மையும் கொண்ட பல இயக்கங்களின் மீது எனக்கு நிரம்ப அன்பும் மரியாதையும் உள்ளதைப் போலவே விமர்சனங்களும் உண்டு.
அந்த விமர்சனங்களை அமைப்புகளுக்கு உள்ளிருந்து வைப்பதைவிட வெளியிலிருந்து தோழமைபூர்வமாக வைக்கலாம். ஆனால் அதற்காகப் பொதுவெளியில் அதை 'அம்பலப்படுத்த வேண்டும்' என்றில்லை. இதன் அர்த்தம் எப்போதுமே பொதுவெளியில் வைக்கக்கூடாது என்பதல்ல. ஆனால் அது எந்தப் பொதுவெளி, அந்தப் பொதுவெளியில் யாரெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியமென்று கருதுகிறேன்.
உதாரணமாக உங்கள் அமைப்பையே எடுத்துக்கொண்டால் இட ஒதுக்கீடு தொடர்பான ம.க.இ.கவின் பார்வைகளில் எனக்கு கருத்துமாறுபாடுகள் உள்ளன. (விரைவில் விரிவாக எழுதுகிறேன்.) ஆனால் ஒரு விசயத்தை ஒத்துக்கொள்கிறேன். தனியார்மயத்தை எதிர்க்காமல் வெறுமனே இட ஒதுக்கீடு ஆதரவு என்பது ஏமாற்றுவேலைதான். அரசுத்துறைகளே இல்லை என்னும்போது இட ஒதுக்கீடு எங்கிருந்து வரும்?
மேலும் உங்கள் மொழியில் நீங்கள் அரசியல் விபச்சாரம், அரசியல் விபச்சாரி போன்ற வார்த்தைகளை சகஜமாகப் பயன்படுத்துகிறீர்கள். விபச்சாரி என்று ஒருத்தி இருக்கிறாளெனில் விபச்சாரியிடம் 'படுத்து எழுந்தவனை' என்னவென்று சொல்வீர்கள்? அரசியல் விபச்சாரன் என்று யாரையாவது குறிப்பிட்டிருக்கிறீர்களா, என்ன?
இதுமாதிரியான பல விமர்சனங்கள் இருக்கின்றன, பேசுவோம். கலைஞர்களின் சுதந்திரத்தை அமைப்புகள் பறிக்கின்றன என்றெல்லாம் நான் உளறவிரும்பவில்லை. தன் சொந்தச்சாதியிலே தேடித்திரிந்து பெண்பார்த்துத் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுத்தள்ளி, ஏதாவது ஒரு நிறுவனத்தில் கைகட்டிப் பணியாற்றி, அல்லது 'கலகக்காரனாய்'க் கடன் வாங்கிக் குவார்ட்டர் அடிக்கும்போதெல்லாம் பறிக்கப்படாத சுதந்திரம் கலைஞர்களுக்கு அமைப்புகளின் மூலமாகத்தான் பறிபோகிறதா என்ன?
மேலும் நான் கலகக்காரனும் கிடையாது, கலைஞனோ அறிவுஜீவியோ கிடையாது. அடிப்படையில் நான் ஒரு அரசியல் உயிரிதான். குடும்பத்தையும் உறவினர்களையும் சொந்தச் சாதிக்காரர்களாகப் பார்த்து உதறித்தள்ளுகிற நம்மால்தான் குஜராத் கலவரத்தில் வயிறுகிழிபட்ட முஸ்லீம் பெண்ணிற்காகக் கண்ணீர் சிந்த முடிகிறது. ஈழத்தில் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களாக இருந்தாலும் அபுகிரைப் சிறையில் குதத்தில் ஆண்குறி நுழைக்கப்பட்ட ஆண்களாக இருந்தாலும் அவர்களையெல்லாம் சாதி, மதம், மொழி, இனம், தேசம், பால் ஆகியவற்றையெல்லாம் தாண்டி நேசிக்கவும் அநீதிகளுக்கு எதிராகக் கோபப்படவும் குரல்கொடுக்கவும் முடிகிறதென்றால் அதெல்லாம் மார்க்ஸ் என்கிற மனிதனால்தான் சாத்தியப்பட்டது என்பதில் எனக்கு மறுப்பில்லை.
தற்சமயம் எந்த அமைப்பிலும் நான் இல்லாதிருந்தாலும் என்னுடைய எழுத்துக்கள் நான் நம்புகிற, நேசிக்கிற கருத்தியலுக்குத் துரோகம் செய்யாதவை. நேர்மையான மாற்றுப் புரட்சிகர இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதரவானவைதான் என்னுடைய எழுத்துக்கள். நம்புங்கள், நானும் உங்கள் நட்புச்சக்திதான்.
மார்க்சையும் அம்பேத்கரையும் பெரியாரையும் நான் நேசிக்கிறேன். ஏனெனில் நான் மக்களை நேசிக்கிறேன். நான் அதிகமும் விரிவாக விளக்க விரும்பவில்லை, புரிந்துகொள்வீர்களென்று நம்புகிறேன். எப்போது, விமர்சனங்கள் இருந்தபோதும் அமைப்பில் சேர்ந்து நேரடியாகப் பணியாற்றித்தானாக வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது அமைப்பில் இணைந்து பணியாற்றத் தயார்தான்.
இதன் பொருள், புதன் கிழமை காலை 10 மணிக்குப் புரட்சி வருகிறதென்றால் 10.05க்கு நான் வந்து இணைந்துகொள்வேன் என்பதாக நீங்கள் புரிந்துகொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த கேள்வி தோழர்.ஸ்டாலினுக்கு
சோசலிசக்கட்டுமானம், வர்க்கங்களைத் தாண்டியும் மருத்துவமனை, கல்விக்கூடம் போன்ற நிறுவனங்களில் தொழிற்படும் நுண் அதிகாரம், பாலியல் அரசியல், தனித்துவமான பெண்ணியம், தலித்துகள், கருப்பர்கள் போன்ற மக்கட்குழுவினர் இவைகளைக் குறித்துப் பேசும் கோட்பாடுகளிலிருந்து இந்தியப்புரட்சியாளர்கள் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லையா?
Posted by
rebel
at
1 comments

